நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் இலக்குவன், தைலம்மை தம்பதியினருக்கு 09-01-1933 அன்று மூத்த மகனாகப் பிறந்த கவிஞரின் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். புலவர் பட்டமும் அதனை தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுத் தேர்ந்த கவிஞர் மீனவன் நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றினார்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ஆகிய மூன்று முதல்வர்களிடமும் பரிசும் பாராட்டும் பெற்றவர்.
“கொஞ்சும் குழந்தை” , “உழைக்கும் பரிதி”, “முத்திரைக்குமரி”, “சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ்”, “பண்டைய தமிழரும், பரதவர் வாழ்வும் ” என்னும் 5 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
எண்ணற்ற பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், இலக்கியத் திறனாய்வுக் கூட்டங்களை தலைமையேற்று நடத்தி இருக்கின்றார். நூற்றுக்கணக்கான திருமணங்களை தந்தை பெரியார் வழியில் நடத்தி வைத்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 100 கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றவர்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அவர் பெயரில் சிந்தனை சிற்பி மழலையர் பள்ளியை அக்கரைப்பேட்டையில் தொடங்கியவர். நாகையில் பல்வேறு அமைப்புகளில் தன்னை இணைத்து சமுதாயப் பணியாற்றினார். இவரின் ஒருமைப்பாடு என்னும் பாடல் (கொஞ்சும் குழந்தை நூலில் இடம்பெற்றது) 5 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும், சிந்தனைச்சிற்பி என்னும் பாடல் (முத்திரைக்குமரி என்னும் நூலில் இடம்பெற்றது ) 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாட புத்தகத்திலும் இடம் பெற்றது.