கவிஞர் மீனவன் அவர்களின் நினைவு நாளையொட்டி (22 ஆகஸ்ட்), கடந்த ஆண்டு அவரது முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
கவிஞரின் முதலாமாண்டு நினைவாஞ்சலி, நினைவு மலர் வெளியீட்டு விழா கடந்த 25 ஆகஸ்ட் 2013 அன்று அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களால் அனுசரிக்கப்பட்டது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. ஜெயபால் அவர்கள் முன்னிலை ஏற்க, கவிஞர் முனைவர். எழில்வேந்தன் அவர்கள் தலைமையேற்றார். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கவிஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த அமைச்சர் மலரஞ்சலி செலுத்தி கவிஞருக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கவிஞரின் குடும்பத்தினர், தமிழறிஞர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நாகை மக்களின் பெருந்திறள் கவிஞருக்கு மலரஞ்சலி செலுத்தியது. கவிஞரின் நினைவு மலரை மாண்புமிகு அமைச்சர் வெளியிட திரு. பி.என். குப்புசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். கவிஞரின் கொஞ்சும் குழந்தை நூலின் மறுபதிப்பை புலவர் அரங்க ராமானுசம் அவர்கள் வெளியிட சிவசக்தி ஆர்.கே. ரவி அவர்கள் பெற்றுக்கொண்டார். கவிஞரின் முதலாமாண்டு நினைவாக அவர்களின் குடும்பத்தினர் உருவாக்கிய கவிஞர் மீனவன் கல்வி அறக்கட்டளை சார்பாக நாகை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காசோலையும் (ரூ.5000, ரூ. 3000, ரூ. 2000 முறையே) பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பெருமைப் படுத்தினார்.
நீண்ட நினைவுரை ஆற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவிஞரின் தமிழாற்றலையும், பெருமைகளையும் எடுத்துரைத்தார். தனக்கும் கவிஞருக்கும் இருந்த நெருக்கத்தை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த சமுதாயம் அந்த கவிஞரை பெருமைப்படுத்த தவறி விட்டது என்ற தனது ஆதங்கத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.
எழுச்சிக்கவிஞர் டாக்டர் எழில்வேந்தன், டாக்டர் பி.என். குப்புசாமி, புலவர் அ.ப. பாலையன், திரு. பெ. இராசேந்திர நாட்டார், புலவர் அரங்க ராமானுசம், புலவர் இராசு, புலவர் சீனி. சண்முகம், புலவர் சவுரிராசன், திரு. அசோகா சுப்ரமணியன், ஆடிட்டர் வை. அண்ணாமலை, திரு. ம.கா. இரகு, கவிஞர் ஆ.மி.ஜவகர், திரு. விஜயசேகர் ஆகியோர் நினைவஞ்சலி ஆற்றினார்கள்.
கவிஞரின் மூத்த புதல்வர் திரு. அம்பிகாபதி அவர்கள் வரவேற்புரையுடன் தொடங்கிய விழாவை கவிஞரின் புதல்வி திருமதி. இந்திராகாந்தி அவர்கள் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.